2022/2023 மற்றும் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழக அரசு மாவட்டக் கலை மன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003 முதல் ஆண்டு தோறும் வயது மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை 100 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளனர். 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 30 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்வாளர் குழு விரைவில் கூட்டப்பட உள்ளது
ஆகவே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு. பரதநாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம்,தேவராட்டம், பாவை கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம். கனியான் கூத்து, புலி ஆட்டம், காளை ஆட்டம். மானாட்டம், பாம்பாட்டம். ஆழியாட்டம். கைசிலம்பாட்டம் (வீரக்கலை), மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
(1) 18 வயதும் அதற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை இளமணி" விருதும்
(2) 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு "கலை வளர்மணி" விருதும்
(3) 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலைச் சுடர்மணி' விருதும்
(4)51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை நன்மணி" விருதும்
(5) 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு "கலைமுதுமணி" விருதும்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் விண்ணப்பத்துடன் வயதுச் சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய விருது. மாநில விருது (கலைமாமணி) மற்றும் மாவட்டக் கலைமன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பம் அனுப்ப வேண்டும்
இம்மாவட்ட விருது பெற தகுதிவாய்ந்த கலைஞர்களிடமிருந்து 15.07.2023 ஆம் நாளுக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு. ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி-06. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார். தெரிவித்துள்ளார்கள்.
